ஜீஎஸ்பி பிளஸ் சலுகைக்காக நாட்டின் தனித்துவ கலாசார பண்பாட்டுக்கு விலை பேச வேண்டாம் - முதலமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


ஜீஎஸ்பி பிளஸ் சலுகையை  வழங்குவதற்கு நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவ பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் முன்வைத்தார்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வெளிவிகாரங்கள் தொடர்பான துணை தலைமைப் பொறுப்பாளர் (diet mar Kreisler)  டீட்மர் கிறிஸ்லர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் அஹமட் ஆகியோருக்கு இடையில் புதன்கிழமை (18.01.2017)  கொழும்பில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.


ஐரோப்பிய தூதுக் குழுவினரிடம் முதலமைச்சர் மேலும் பல விடயங்களை வலியுறுத்தும்போது தெரிவித்ததாவது
நாட்டின் தனித்துவ பண்பாட்டு கலாசாரங்களுக்குப் புறம்பான  நிபந்தனைகளை முன்வைப்பதன் மூலம்நாட்டில் மேலும் பல புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கவே வழிவகுக்கும்.


அத்துடன் இலங்கை பல்லின மத கலாசாரங்களை பின்பற்றுபவர்களை கொண்ட நாடு, எனவே இவற்றை கருத்திற் கொண்டு நிபந்தனைகள் இன்றி ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வரவேண்டும்.

அத்துடன் நாட்டின் மத மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிரான நிபந்தனைகள் முன்வைக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்  செயற்பாடுகளுக்கு  ஐரோப்பிய ஒன்றியம் உதவியளிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

ஜிஎஸ்பி பிளஸ் வழங்கும் போது  கிழக்கில் தற்போது தலைவிரித்தாடிவரும்  வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முகமான தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வர வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.