செம்மொழிப்புலவர் ஆரையூர் அருளம்பலத்தின் 'இறையின்ப பாவாரம்' பக்தி இலக்கிய நுால் வெளியீட்டு விழா!

(சதீஸ், படுவான் பாலகன்)

மட்டக்களப்பு, ஆரையம்பதி செம்மொழிப்புலவர்  மூ.அருளம்பலம் அவா்களின் 'இறையின்ப பாவாரம்' எனும்  3050 பாடல்களை கொண்ட பக்தி இலக்கிய நுால் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை  22ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் எழுத்தாளர் க. சபாரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம்  கலந்து சிறப்பித்தார்.

இவ் விழாவில் நூலின் முதற் பிரதியினை மூ.அருளம்பலம் அவர்களிடமிருந்து   வைத்திய கலாநிதி   எஸ்.அகிலன் பெற்றுக்கொண்டார்.

ஆசியுரையை,  சிவஸ்ரீ.சிவயோகச் செல்வன் த. சாம்பசிவம் சிவாச்சாரியார் நிகழ்த்தினார்.  கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரீக கலை கலாசார பீடத்தின் தலைவர் சாந்தி கேசவன் நூலின் நயவுரையை நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் வ.கனகசிங்கம், கல்முனை தமிழ்சங்க தலைவர்  ப.கந்தசாமி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் ந. வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலோடு ஒன்றித்துவிட்ட இறை முகூர்த்தங்களின் மீது கும்மி, காவியம், காவடிப்பாடல் மற்றும் பக்திபாடல்களாக செம்மொழிப்புலவா் ஆரையூர் அருள் அவா்களால் இயற்றப்பட்ட பக்தி இலக்கியங்களை தொகுத்தாக்கப்பட்டு மக்களின் கைகளுக்கு கையளிக்கப்பட்டது. 

இந்நூல் 3050பாடல்களை கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல இந்து கோயில்களின் வரலாறு, பூசை, வழிபாடுகள் போன்வற்றினையும் இப்பாடல்கள் உள்ளடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.