நாட்டின் சில பகுதிகளில் நாளை 24ஆம் திகதிவரை அதிகளவிலான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனடிப்படையில் வடக்கு, கிழக்குமாகாணங்களிலும் வறட்சி நிலவிய பிரதேசங்களிலும் எதிர்வரும் இரு நாட்களுக்கு மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் இதன்போது இந்த பிரதேசங்களில் காற்று சற்று அதிகரித்து வீசக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நிலவிய வரட்சியினையடுத்து நாட்டின் சிலபாகங்களில் தற்போது ஓரளவு மழை பெய்துவருகிறது.
வடக்கு,வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடியமழையோ பெய்யலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்தகாற்றுவீசக் கூடும். மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலயங்களில் மட்டக்களப்பில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வாகரைப் பிரதேசத்தில் 94 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று வரையான காலப் பகுதியில் வறட்சியினால் 10 இலட்சத்து 41 ஆயிரத்து 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.