கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்ற பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்

 -ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு காத்தான்குடியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஜா எல டிப்போவுக்குச் சொந்தமான இ.போ.ச பயணிகள் பஸ்மீது மட்டக்களப்பு கடவத்தமடு எனுமிடத்தில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் வழமை போன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு  கொழும்பிலிருந்து மட்டக்களப்பு காத்தான்குடி நோக்கிப் புறப்பட்டுள்ளது.
பஸ் இரவு 9 மணியளவில் மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள கடவத்தமடு எனுமிடத்தைக் கடக்கும்போது இருட்டில் மறைந்திருந்த நபர்கள் கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தியதாக வெலிக்கந்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குலின்போது பஸ்ஸின்; முன் கண்ணாடிகள் சேதமடைந்துள்ள போதிலும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.