உகந்தையில் நேர்த்திக்கடன் செலுத்தச்சென்ற சிறுவன் பலி

நேர்த்திக்கடன் செலுத்த குடும்பத்துடன் சென்ற சிறுவன் உகந்தமலையிலுள்ள சுனையில் வீழ்ந்து நேற்று (15) உயிரிழந்துள்ளார்.
மட்டு.கோட்டைக் கல்லாற்றைச் சேர்ந்த ரவி அபிலாஸ் என்ற 11வயது சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,


உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு நேற்று சிறுவன் குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.
நேர்த்தி கடனை செலுத்துவதற்காக மலைமேலுள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். இதன்போது, அருகிலுள்ள நீர்நிரம்பிய சுனைக்குள் சிறுவன் தவறிவீழ்ந்துள்ளார்.

அருகிலுள்ள சிலர் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். எனினும் முயற்சி பலனின்றி கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அரைமணி நேரத்தின் பின்னர் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாணமை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் நேற்று மாலை பொத்துவில் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியாது போயுள்ளது.


பிரேத பரிசோதனைகள் இன்று நடத்தப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.