சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறிக்கொண்டு, மக்களிடம் செல்லுவதற்கு தனக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி, மக்களிடம் செல்வதை தவிர்த்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தமக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் சுமந்திரனும் சம்பந்தனுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே எழுக தமிழ் பேரணியில் மக்கள் ஒன்று திரண்டார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான அங்கீகாரம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எழுக தமிழ் பேரணியைத் திசை திருப்புவதற்காக குறித்த பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு கட்டத்திலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் என எந்தவொரு கட்டத்திலும் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இலங்கைக் தமிழரசுக் கட்சிக்கு மாறானதாகவே எழுக தமிழ் பேரணி என பிரசாரம் செய்தது தமிழரசுக் கட்சியே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.