முன்னாள் போராளி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள்
போராளியொருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களும், மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி மாலை, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடியில் வைத்து ரி56 ரக துப்பாக்கியொன்றுடன், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து மேலும் மூவர், சந்தேசத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.



குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 6ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளாரென, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.