ஆயுத முரண்பாட்டுக் காலத்தில் 2594 பொலிஸார் உயிரிழந்ததுடன் 639 பொலிஸார் அங்கவீனமடைந்துள்ளனர் : சுமித் எதிரிசிங்ஹ

(கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 ஆயுத முரண்பாடு இடம்பெற்ற கடந்த 3 தசாப்த காலத்தில் 2594 பொலிஸார் உயிரிழந்ததுடன் 639 பொலிஸார் அங்கவீனமடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்ஹ தெரிவித்தார்.

இலங்கைப் பொலிஸ் சேவையின் 153ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் மட்டக்களப்பு சிரேஷ்ட  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (21.03.2017) சிரேஷ்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தலைமையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் உயிரிழந்த பொலிஸாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தொடர்ந்து உரையாற்றிய சுமித் எதிரிசிங்ஹ,
இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு இற்றைவரை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பல்வேறு சந்தர்ப்பங்களில்  3,211 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்.


பொலிஸ் தினத்தில் அவர்களை நாம் நினைவுகூர்வதோடு அவர்தம் குடும்பத்தினரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. நாட்டுக்காக தம் உயிரை நீத்த பொலிஸாரை நன்றியுணர்வோடு நாம்  நினைவு கூருவது வரலாற்றில் இடம்பிடித்து வந்திருக்கின்றது.

மேலும், கடமையின்போது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இடைநிறுத்தப்பட்ட 1500 பொலிஸார் மீண்டும் கடமைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் கடiயைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பொலிஸார் முன்னுதாரணமான தேசியப் பிரஜைகளாக இன மத பேதமின்றிக் கடமையாற்றி நாட்டில் சமாதான சகவாழ்வை நிலை நிறுத்துவதில் பாடுபட்டு வந்துள்ளார்கள்.

இனிமேலும் அந்தக் கடமையை அவர்கள் சிறப்பாகச் செய்வார்கள். கடந்த காலத்திலும் ஆயுத வன்முறைகள் தலைவிரித்தாடிய சூழ்நிலையிலும் இன்னும் இயற்கை; செயற்கை அனர்த்தங்களிலும் அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்கள்' என்றார்.