மட்டக்களப்பில் சிறுவன் மரணம் – சந்தேகத்தின் பேரில் தாயும் வளர்ப்புத் தாயும் விளக்கமறியலில்

மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் நான்கு வயதான சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயும், வளர்ப்பு தாயும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 25 வயதான தாயும், 55 வயதான வளர்ப்பு தாயுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வளர்ப்புத் தாயின் மனநிலை குறித்து மருத்து பரிசோதனை மேற்கொள்ளுமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.

மேலும், வளர்ப்புத் தாயின் பராமரிப்பில் இருந்த எட்டு வயது சிறுமியை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


இந்த சிறுமியும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த 04 வயது சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி இரவு 04 வயதான பாலகிருஷ்னண் சதுர்சிகன் என்ற சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.