பெண்ணுக்கு மயக்க மருந்து விசிறி வன்புணர முயற்சி : களுவாஞ்சிகுடியை சேர்ந்தவருக்கு விளக்கமறியல்

ஊர்காவற்றுறை பகுதியில் வீட்டில் தனித்திருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து விசிறி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபரை, எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர், அங்கு தனித்து இருந்த 18 வயதுடைய யுவதி தூக்கத்தில் இருந்த நிலையில், அவரது வாயை கைகளினால் பொத்தியவாறு அவர் மீது மயக்க மருந்தை விசிறியுள்ளார்.

எனினும், சுதாகரித்துக் கொண்ட யுவதி கூக்குரல் இட்டுள்ளார். இதனையடுத்து, அங்கு திரண்ட அயலவர்கள், சந்தேக நபரை மடக்கி பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த சந்தேக நபர் (35 வயது) பொலிஸ் கடமையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த  குறித்த நபர், தற்போது ஊர்காவற்றுறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.


சந்தேக நபரை ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, சந்தேக நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.