கடும் வெய்யிலை சமாளிக்க சிறந்த வழிகள் !

தற்போது வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை காலத்தில் நாம் செய்ய தகுந்தவை செய்யக்கூடாதவை குறித்து சில  ஆலோசனைகள் 
  • கோடை காலத்தில் செய்ய வேண்டிய முதல் முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் அருந்துவது; அதிகப்படியான நீர்ம உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு அல்லது பிற பழ சாறுகளை எடுத்து கொள்ளலாம்.
  • அதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க மோரில் உப்பு போட்டு அருந்துவது சிறப்பாக இருக்கும்.
  • மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற நிறங்களில் உடைகள் அணியலாம். பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு.
  • முடிந்தவரை உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம்.

  • ஜங்க் ஃபுட் எனப்படும் சிறு தீனிகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு கோடைகால வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள் அதிகமாக உள்ளன; எனவே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.
  • முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் போவதை தடுக்க தண்ணீர் எடுத்து கொள்வதை தவிர்ப்பார்கள், ஆனால் வயதின் காரணமாக அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்து விடும் எனவே நீர்ச்சத்து குறைபாடு, மிக குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளதால் குறைந்தது 2-3 லிட்டர் நீரை பருக வேண்டும்.
  • இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடைய நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப் படி நீர் அருந்த வேண்டும்
  • நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் அது ஒரு சிறந்த உணவாக இருக்கும்; தர்பூசணி போன்ற நீர் பழங்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
  • நீரழிவு நோயாளிகளுக்கு, பசி உணர்வு குறைந்து காணப்படும் எனவே அதற்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
  • கோடை காலத்தில், குழந்தைகளுக்கு வியர்வைக் கட்டிகள் மற்றும் வேர்க்குருகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது; அவ்வாறு வருவதை தடுக்க உடலை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். மேலும் அவற்றின் மீது பவுடர்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை வியர்வை துவாரங்களை அடைத்து கொண்டும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும்.
  • அடிக்கடி முகம் கழுவது இரண்டு முறை குளிப்பது என்று சுத்தமாக இருக்க வேண்டும்; சிறிது வெதுப்பான நீரில் குளிப்பது சிறந்ததாக இருக்கும்.
  • குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.
  • கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக ஏற்படும் என்பதால் வெளிப்புற உணவுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்கக்கூடும் என்று நாம் உறுதியாகக் கூற இயலாது எனவே பெரும்பாலும் அதை தவிர்ப்பது நல்லது.
  • கோடையில் தாகம் அதிகம் எடுக்கும் என்பதால், மண்ணெண்ணெய் போன்ற எரிப் பொருட்களை குடிநீர் பாட்டில்களில் சேகரிப்பதை தவிர்க்க வேண்டும்; சில சமயங்களில் குழந்தைகள் யோசிக்காமல் அதை பருகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் அதை அறவே தவிர்க்க வேண்டும்.
  • காற்றோட்டமான அறையில் உறங்குவது நல்லது.