துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதானவருக்கு விளக்கமறியல்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காஞ்சரம்குடா, பனையறுப்பான் கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பி..பிரேம்நாத் உத்தரவிட்டார்.

இச்சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தியபோதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பனையறுப்பான் கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்கள் நால்வர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட தகராறை அடுத்தே, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தகராறின்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அத்துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளதாகவும் கூறினர்.