7500 சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற முடிவு : அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சட்டவிரோத அகதிகள் சுமார் 7500 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவில் போதிய காரணங்கள் இன்றி, இலங்கை, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தஅகதிகள் தஞ்சமடைந்துள்ளமையினால் அரசிற்கு பொருளாதார நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டைட்டன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு போதுமான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் தம்மை அகதிகளாக பதிவு செய்வதற்கு பொய்யான காரணங்களை அளித்து, சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கியுள்ளதாக அந்நாட்டு அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் 2012 முதல் 2014 வரையான காலப்பகுதியில் அகதிகளாக நாட்டிற்குள் வந்த 30,500 பேரில், இதுவரை 23000 பேர்வரையிலானவர்கள் சட்டப்பூர்வமான பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், எஞ்சிய சுமார் 7500 பேர் முறையான காரணங்கள் இன்றி அகதிகள் அந்தஸ்தை பெரும் முயற்சியில் ஈடுபடுவதனால், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டைட்டன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.