போதனா வைத்தியசாலையாக மாறுகிறது மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் மருத்துவமனை

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று அதன் மருத்துவமனையை  போதனா வைத்தியசாலையாக மாற்றி மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி அரசுடைமையாக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) குறித்த இரு அமைச்சுக்களும் இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

மேலும், மாலபே கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரை குறித்த கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்க்க கூடாதென்றும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாலபே கல்லூரிக்கு உள்வாங்கப்படும் மாணவர்கள், இலங்கை மருத்துவ சபை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகுதிகாண் பரீட்சையில் தோற்றுவது அவசியம் என்றும், பட்டப்படிப்பிற்கான இறுதிப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஹோமாகம மற்றும் அவிசாவளை அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.