உடற்பருமனால் அவதிப்பட்டு உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் குரங்கு

சுற்றுலாப் பயணிகள் வீசும் துரித உணவுகளை உண்டு, உடற்பருமனால் அவதிப்பட்டு வந்த குரங்கு ஒன்று தாய்லாந்தில் மீட்கப்பட்டு, அதற்கு கடுமையான உணவுக்கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தாய்லாந்துக்கு அதிகம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் காடுகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர்.

அவற்றுடன் விளையாடும் பயணிகள், குரங்குகளுக்கு உணவுகளையும் அளிக்கின்றனர். துரித உணவுகளையும், சோடா பானங்களையும் தொடர்ச்சியாக உட்கொள்ளும் குரங்குகள் உடல் பருமனுக்கு ஆளாகின்றன.

அத்தகைய ஒரு குரங்கின் புகைப்படம் கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானது. இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்தக்குரங்கைப் பிடித்து பரிசோதனை செய்தனர்.


சாதாரணமாக குரங்குகள் 9 கிலோ வரை எடை கொண்டிருக்கும். கொழுப்பால் பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு சுமார் 3 மடங்கு வரை எடை கூடும். பிடிபட்ட குரங்கு சுமார் 26 கிலோ எடையில் இருந்தது.

மற்ற குரங்குகளே அதற்கு உணவு கொண்டு வந்து அளித்துக்கொண்டிருந்தன. அதேநேரத்தில், குட்டிக் குரங்குகளுக்கும் அந்தக் குரங்கு உணவைப் பகிர்ந்து அளித்து வந்துள்ளது.

குரங்குக்கு உணவு கட்டுப்பாட்டு முறையை (டயட்) மேற்கொள்ளும் விலங்கு மருத்துவர், ”அந்தக் குரங்கு ஆபத்தான நிலையில் உள்ளது. அதற்கு எப்போது வேண்டுமானாலும் இதய நோயும், நீரிழிவும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன,” என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 400 கிராம் புரதம், பழங்கள், காய்கறிகள் ஆகியவை மட்டுமே ஒரு நாளுக்கு இரு முறை வழங்கப்படுகின்றது.