மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பலி

சம்மாந்துறையில் வசித்துவந்த ஆதம்பாவா முகம்மது தன்ஸிர் (வயது 27) என்ற இளைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் புடைவைக் கடையொன்றில் புதன்கிழமை (17) இரவு அலுமினியம் பொருத்தும் வேலை செய்துகொண்டிருந்தபோது, மின் தாக்குதலுக்குள்ளானார்.


இவரின் கையிலிருந்த அலுமினியக் கம்பி அக்கடையின் அருகில் காணப்படும் மின்சாரக் கம்பியில் பட்டதால்,  இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.