வாள்வெட்டில் மூவர் காயம்

திருகோணமலை-கன்னியா, கிளிகுஞ்சு மலை பகுதியில் இன்று (20) மாலை 5.30மணியளவில், மூவர் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கன்னியா-மாங்காயூற்று பகுதியைச்சேர்ந்த டி.ஜானகி (59வயது) அவரது மகனான டி.பிரபாகரன் (42வயது) மற்றும் கன்னியா.கிளிகுஞ்சுமலை பகுதியைச்சேர்ந்த ஆர்.குகதாஸ் (26வயது) ஆகியோர் எனவும் தெரியவருகின்றது.

 சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
படுகாயமடைந்த 26 வயதுடைய நபர் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை வீதியை கடக்க முயன்ற ஆட்டுடன் மோதியுள்ளார். இந்நிலையில், அவ்விடத்திலிருந்த ஆட்டு உரிமையாளருடன் ஆட்டை ஒழுங்காக பார்த்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார். இதனையடுத்தே இவ்விருவருக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவ்வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்தே, வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கைகலப்பை தடுப்பதற்கு வந்த தாயொருவரும் தலையில் வாள் வெட்டு காயங்களுக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.