ஆரையம்பதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு !

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி, ஊர்வீதி காங்கேயனோடையில் சந்தியில் வைத்து இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காங்கேயனோடையைச் சேர்ந்த முகம்மட் கலீல் மஸ்தி (வயது 29) எனும் இளைஞர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்;கு மாற்றப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன், அவரது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதல்களையும் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞர், கடந்த மாதம் சிலரினால் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.