விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

திருகோணமலை –கந்தளாய் பிரதான வீதியில்  பாலம் போட்டாறுப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளிப்பொத்தானை 98ஆம் கொலணி அரபா நகரைச் சேர்ந்தவர்களான அப்துல் ரவூப் சுஜான் (வயது 28), நஹீர் முஹம்மட் (வயது 20) ஆகியோரே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதாலேயே, இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

திருகோணமலை நகரிலிருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த லொறியை பாலம் போட்டாறுக் கோவிலுக்கு முன்பாக நிறுத்திய அதன் சாரதி, அக்கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு உண்டியலுக்கு காணிக்கை செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து  அந்த லொறியுடன் மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களான நஹீர் முஹம்மட் என்பவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ள அதேவேளை, அப்துல் ரவூப் சுஜான் என்பவர்  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் பலியாகியுள்ளார்.

அவர்களின் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.