விபத்தில் மாணவன் பலி, மற்றுமொரு மாணவன் படுகாயம்

தாழங்குடா, மண்முனை வீதியில் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவன் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடாவைச் சேர்ந்தவர்களான புவனசிங்கம் சதீஸ் (வயது 17) என்ற மாணவன் பலியான அதேவேளை, கனேந்திரன் யோயல் (வயது 18) என்ற மாணவன் படுகாயமடைந்துள்ளான்.

இந்த இரு மாணவர்களும் பயணித்த மோட்டார் சைக்கிள், மண்முனைப் பாலத்துக்கு அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

அதிகூடிய வேகமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரியவருகின்றது எனத் தெரிவித்த பொலிஸார், இந்த விபத்துத் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.