விபத்தில் சாரதிகள் இருவர் படுகாயம்

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதங்கடவெல பகுதியில் சிறிய உழவு இயந்திரத்துடன் டிப்பர் வாகனமொன்று, இன்று (22) காலை 6.30மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில், ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மரதங்கடவெல பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி,  ஹோட்டலொன்றுக்கு விறகுகளை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்தின் பின்புறமாக, மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதியமையினாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரத்தின் சாரதியான ஹொரவ்பொத்தானை-மரதங்கடவெல பகுதியைச் சேர்ந்த மல்ஹாமிகே ஜெயசிங்க (55 வயது) படுகாயங்களுக்குள்ளான நிலையில், ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாரென, வைத்திசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, டிப்பர் லொறியின் சாரதியான ஹலாவத்த-குமாரகட்டுவ பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.டி.என்.ருவன் அனுராத (27 வயது) ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்தால், இரு பகுதிகளுக்கும் வாகனம் செல்ல முடியாத நிலை காணப்பட்டதுடன், விபத்துக்குள்ளான லொறியை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.