மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மீற்றர் ஓட்டப் பாதை கொண்ட பாடசாலையை ஏற்படுத்துவேன்’ : கிழக்கு மாகாண ஆளுனர்

“மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மீற்றர் ஓட்டப் பாதை கொண்டு ஒரு மாகாணப் பாடசாலையை வெகுவிரைவில் ஆவண செய்வோம். அதற்கு என்னாலான பங்களிப்பை செய்வேன்” என்று, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.


கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் ஆரம்பநாள் நிகழ்வுகள், இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி,ஏ.நிசாம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“உலகில் பல விழாவுக்குச் சென்றுள்ளேன். உலகின் எந்தவொரு விழாவுக்கும் இரண்டாம் தரமல்லாத விளையாட்டு விழாவில் பங்கு பெறுவதனையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். வரலாற்றைப் புரட்டிப்பார்ப்போமானால், செய்யாத தவறுக்காககத் தண்டிக்கப்படட பல இளைஞர்களைக் கொண்டுள்ள பிரதேசமாக இந்தப் பிரதேசம் காணப்படுகின்றது.

“ஜனாதிபதி, இந்த நிலையை நன்கு அறிவார்கள் மக்களிடையே சமாதானம் சகவாழ்வை என்பவற்றை ஏற்படுத்த ஜனாதிபதியின் பிரதிநிதியாகிய நான் செயற்படுவேன் என்பதனை இந்த இடத்தில் உறுதி கூறுகிறேன்.

“நியமனம் பெற்று 10 நாட்களுக்குள் மக்களின் ஒன்றிணைவைக்காண வாய்ப்பளித்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன. மக்களிடையே சமாதானமும் சகவாழ்வும் ஏற்படுவதற்கு இது போன்ற ஒன்றிணைந்த விழாக்கள் எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

“இந்த இடத்தில் கல்வி முக்கியம் பெறுகிறது. கிழக்கு மாகணத்தில் அதிக சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும், மாகாணம் 9ஆவது இடத்தில் இருப்பது என்பது வேதனையளிக்கக்கூடிய விடயம் தான். எனவே, கல்விக் கூடாக, கல்வியை மாத்திரமல்ல ஒழுக்கத்தையும் வளர்க்க நாம் திட சங்கல்ப்பம் பூண்டு செயற்பட வேண்டும். கல்வி முக்கியமாக சம வாய்ப்புகளையும் பொருத்தமான சந்தர்ப்பங்களையும் மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

“தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டுத்து வருமானம் வழிகளை கிழக்கு மாகாண மக்களிடையே ஏற்படுத்திக் கொடுத்து வளம் மிக்க சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் கலந்தாலோசிப்போம். அத்தோடு கல்வித் துறையை வலுப்படுத்தி மாணவர்களை வளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. எமக்குப் பொருத்தமான வழிக்காட்டல்கள் தேவைப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன.



“ஒலிம்பிக் என்பது எமக்கு மிகவும் தூரத்தில் இல்லை. எம்மால் அடையமுடியாத காரியமுமல்ல. உங்களுக்கான வாய்ப்புகளும் களமும் அமைத்துக் கொடுக்கப்படுமானால் அவற்றை அடையக்கூடியவர்கள் பலர் இருப்பீர்கள். அதற்காக முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மீற்றர் ஓட்டப் பாதை கொண்டு ஒரு மாகாணப் பாடசாலையை வெகுவிரைவில் ஆவண செய்வோம். அதற்கு என்னாலான பங்களிப்பை செய்வேன்.

“எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் கிரிக்கட்டில் உலகக் கோப்பையை வென்றார்கள், கூடைப்பந்து மற்றும் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குகிறார்கள். இது உலகளவிலே இலங்கையின் பெயரைச் சிறப்புறச் செய்திருக்கிறது. அது போன்று கிழக்கும் நாமத்தையும் நிலைநாட்டு வேண்டும்” என்றார்.