இளைஞன் கடத்தி கொலை; ஒருவருக்கு மரண தண்டனை

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதேசத்தில் ஒருவரைக் கடத்திச் சென்று, பொல்லால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபரொருவருக்கு, மரண தண்டனை வழங்கி, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க உத்தரவிட்டார்.
மேலும், இருவர், இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி, கல்முனைகுடி, புறாச்சந்தியில் வைத்து கல்முனைக்குடியைச் சேர்ந்த தாஸ்கான் (வயது 25) என்பவர் கடத்தப்பட்டு, பின்னர் பொல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில், மூவர் கைதுசெய்யப்பட்டு, கல்முனை பொலிஸாரால், கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை இடம்பெற்று வந்தது.
இவ்வழக்கு மேலதிக விசாரணைக்காக, சட்ட மா அதிபரால், சந்தேகநபர்கள் மீது கல்முனை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ் வழக்கு விசாரணை, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி பி. சுகர்னராஜ் முன்னிலையில், 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 3 சந்தேகநபர்களையும், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தார்.
எனினும், மரண தண்டணை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், அம்மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி, உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீர்ப்பு வழங்குமாறு, கல்முனை மேல் நீதிமன்றத்துக்குக் கட்டளைப் பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து இவ்வழக்கை,கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க, நேற்று (11) மீண்டும் விசாரணை செய்து, குற்றவாளியாக  இனங்காணப்பட்ட 1ஆவது நபருக்கு, மரண தண்டணை வழங்கித் தீர்ப்பளித்தார்.
அத்துடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
சாய்ந்தமருதை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான முகம்மது யூஸுப் தியாஸ் அல்லது ஜெஸ்கான் (வயது 38) என்பவருக்கே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்காளி சார்பில், அரச சட்டத்தரணி மலீக் அஸீஸ், மன்றில் ஆஜராகி இருந்தார்.