காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்கள் பங்குகொள்ளும் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்படும் நடமாடும் பொலிஸ் சேவையின் ஓர் அங்கமாக மூன்று கிரிக்கட் அணிகள் பங்குகொள்ளும் 8 (எட்டு) ஓவர் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி 12 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் முதலாவது,இரண்டாவது அணிகளுக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவினால் வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணங்கள் கிரிக்கட் அணிகளுக்கு காண்பிக்கப்பட்டது.


இக் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி ,காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு,திருகோணாமலை மாவட்ட பணிப்பாளர் என்.விமளராஜ்,காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ரீ.மகேஸ்வரன் ,காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் கிரிக்கட் அணியின் பிரதிநிதிகள்,ஒல்லிக்குளம் பைனாஸ் விளையாட்டுக் கழகம்,கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகம் என்பவற்றின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய கிரிக்கட் அணி,ஒல்லிக்குளம் பைனாஸ் விளையாட்டுக் கழகம்,கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகம் என்பவற்றின் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்கள் இணைந்து பங்குகொள்ளும் எட்டு ஓவர் குறித்த கிரிக்கட் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் முதலாவது,இரண்டாவது அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்கள் இம் மாதம் 20ம் திகதி காத்தான்குடிக்கு வருகை தரும் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.