மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல்

 மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட  27வது ஆண்டு நினைவேந்தல் நேற்று புதன்கிழமை (20) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

1990ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான்குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் இராணுவ சீருடை தரித்தவர்களினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடைபெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள  நினைவுத் தூபியில் மலர் மாலை அணிவித்து மெளுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலய அருட்தந்தை ரமேஷ் கிறிஸ்டி அவர்களின் தலைமையில் விஷேட பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உறவுகளை இழந்த குடும்ப உறவினார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

20.09.1990 அன்று காலை சவுக்கடி கிராமத்துகுள் நுழைந்த இராணுவ சீருடை  தரித்தவர்கள் பொதுமக்கள் இருந்த பகுதிகளில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தமது பிள்ளைகளை கையில் ஏந்தியவாறு பெண்கள் முதியவர்கள் என பலரும் ஓடி ஒழித்துள்ளனர்.

இதில் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் தங்களால் ஓடி உயிர்தப்ப முடிந்தவர்கள் தப்பித்துக்கொள்ள மிகுதியாக  இருந்த நான்கு மாத சிசு உட்பட 26 பேரை கொடூரமான முறையில் கொலை செய்து எரித்து இரண்டு குழிகளில் புதைத்துள்ளனர். சவுக்கடி கடலில் மீன்பிடித் தொழில் ஈடுபட்ட 7 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்பகளையும் குழியில் போட்டு புதைத்துள்ளனர். இவர்களில் நான்கு மாத சிசு, 10 சிறுவர்கள், முதியவர்கள் என 33 பேர் அடங்குவர்.

குறித்த சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்தின் பின்  உயிர் தப்பியவர்கள் வந்து பார்க்கும் போதும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இரண்டு குழிகளில் அரைகுறையாக எரிந்த நிலையில் இருந்த தமது உறவினர்களின் சடலங்களை எடுத்து அடக்கம் செய்துள்ளனர். குறித்த இடத்தில் தற்போது நினைவுத் தூபி அமைக்கப்பட்டு வருடந்தோறும் நினைவுகூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.