ரயில் இணைப்பு பஸ் சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு, ரயில் நிலையத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று நகருக்கான ரயில் இணைப்பு பஸ் சேவையை, மீண்டும் ஆரம்பிக்குமாறு, பிரயாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலை 6.5க்கு, கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்குப் பிற்பகல் 2.45க்கு வரும் உதய தேவி ரயிலுக்கு, மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து கல்முனை ஊடாக அக்கரைப்பற்று செல்வதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையால் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.



இந்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால், கொழும்பிலிருந்து வரும் நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரயாணிகள், பல்வேறு அசௌகரியங்கங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன், பெண்கள், சிறுவர்கள், நோயாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 7.15க்கு புறப்படும் ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.55க்கு வரும் பாடுமீன் கடுகதி ரயிலில் வரும் பிரயாணிகளின் வசதி கருதி அம்பாறை நகருக்குச் செல்வதற்கு ஈடுபடுத்தப்பட்ட பஸ் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இவ்விரு பஸ் சேவைகளையும் பிரயாணிகளின் நன்மை கருதி மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.