நானே உத்தரவிட்டேன், குற்றத்தை நானே ஏற்றுக்கொள்கின்றேன்! – உண்மையை கூறுகின்றார் மஹிந்த

தேரர்களுக்கு சமய அனுட்டானத்துக்கான ‘சில்’ ஆடைகளை வழங்குவதற்கான உத்தரவை நானே வழங்கினேன். ஆகவே குற்றத்தினை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில் ஆடைகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில், மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சலை வைத்தியசாலையில் சந்தித்த மஹிந்த, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரின் செயற்பாடுகளில் தவறு ஏதும் இல்லை, இவர்கள் விடயத்தில் ஒருதலை பட்சமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சில் ஆடைகளை கொடுப்பதற்காக பணம் ஒதுக்கப்பட்டிருந்தது அதனை நானே முன்னெடுத்தேன் எனக் குறிப்பிட்ட மஹிந்த, அது தேர்தலுக்காக செய்த வேலைத்திட்டம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில் துணிகளில் எனது புகைப்படங்கள் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டும் பொய்யானதாகும். என்னை தவறாக அடையாளப்படுத்தவே இவ்வாறான கதைகள் கூறப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடைகளை கொடுக்குமாறு நானே உத்தரவிட்டேன். அதனை நிறைவேற்றியதற்காக இன்று இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனக் கூறிய மஹிந்த, இந்த விடயத்தில் களவும், குற்றமும் இடம்பெறவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.