கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் முன்னாள் போராளிகளினால் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

(எஸ்.கார்த்திகேசு)

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர்களின் துயிலும் இல்லம் இன்று 09ஆம் திகதி சனிக்கிழமை ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளினால் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டு/அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஜனநாயக போராளிகள் கட்சியின் இணைப்பாளர்களான கே.பிரபாகரன் மற்றும் எஸ்.சுதாகரன் ஆகியோரின் தலைமையில் இவ் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் முன்னாள் போராளிகளும் கலந்து கொண்டு இருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட  ஜனநாயக கட்சியின் இணைப்பாளர் எஸ்.சுதாகரன் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை இவ் மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வந்த நிலையில் 2006ஆம் ஆண்டுடன் இங்கு உயிர் நீத்த மாவீர்களுக்கு நினைவேந்தல்கள் இடம்பெறவில்லை.

அந்தவகையில் இம் முறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ள சுமார் 700 மாவீர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் இன்று முன்னாள் போராளிகள் ஆகிய நாங்கள் ஒன்றினைந்து எமது மாவீர்களின் துயிலும் இல்லத்தினை துப்பரவு செய்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.