தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் 3000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய சுமார் 3000 ஆசிரியர்களுக்கு, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள 353 தேசிய பாடசாலைகளில் சுமார் 37,000 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

இவர்களில் சுமார் 12,000 பேர் ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு முதற்கட்டமாக உயர்தர வகுப்புக்களுக்கான 3000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாவது கட்டத்தின் கீழ் எதிர்வரும் ஜனவரி மாதம், தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்களில் கற்பிக்கும் 9000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் உரிய நடைமுறையை பின்பற்றாமல் கல்வி அமைச்சு இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கமும், இலங்கை ஆசிரியர் சங்கமும் தமது எதிர்ப்பினை வௌியிட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த இடமாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அந்த சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஆசிரிய சங்கங்களின் கருத்தை மறுத்துள்ள கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், சுயாதீன குழுவொன்றின் ஊடாகவே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.