65 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான சிறைச்சாலை திறப்பு

சர்வதேச தரத்திலான சிறைச்சாலை கட்டத்தொகுதியொன்று அங்குணகொலபெலஸ்ஸ என்ற இடத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றபோது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்வளிப்பு , மீள்குடியேற்ற மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் இந்த சிறைச்சாலையை திறந்துவைத்தார்.

தென்மாகாணத்தில் அங்குணகொலபெலஸ்ஸ என்ற பிரதேசத்தில் எறமினியாய என்ற இடத்திலேயே இந்த சிறைச்சாலை 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

தங்காலையிலுள்ள சிறைச்சாலைக்கு பதிலாக அமைக்கப்பட்ட இந்த சிறைச்சாலையில் ஆண் பெண் உள்ளிட்ட 1500 கைதிகள் இருப்பதற்கான வசதிகள் உண்டு.

5 பில்லியன் ரூபா செலவில் நவீன்தொழில்நுட்பத்துடனான CCTV பாதுகாப்பு திட்டத்துடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலையை அங்கிருந்து அவதானிப்பதுடன் கொழும்பிலிருந்தும் அவதானிக்கக்கூடிய வசதிகள் இதில் உண்டு.

கைதிகளுக்கான வைத்தியசாலை, தொழிற்பயிற்சி மத்தியநிலையம் , விளையாட்டு மைதானம், கைத்தொழில் பிரிவு , அதிகாரிகளுக்கான வீட்டு வசதி, கேட்போர் கூடம், சிற்றுண்டிசாலை, வங்கிக்கிளை , அங்காடிசந்தை , பார்வையாளருக்கான மண்டபம் என்பன இதில் உண்டு