திருக்கோவில் காஞ்சிரம்குடா 7 தமிழ் இளைஞர் மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் படுகொலை நினைவேந்தல்

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் இளைஞர்கள் 7பேர் இரானுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த இளைஞர்களின் 15வது நினைவேந்தலும், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களினதும் 12வது நினைவேந்தல்  நிகழ்வும் உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆ.ஜேன்சனின் தலைமையில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் முன்பாகவுள்ள நினைவுத் தூபியில் .2017.10.09ஆம் திகதி திங்கட்கிழமை காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


இந்நினைவேந்தல் உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.00  மணியளவில் மாணிக்கப்பபிள்ளையார் ஆலயத்தில் ஆலய மணியொலிக்கப்பட்டு பிரதான சுடர் அதிதிகளால் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து 7 இளைஞர்களின் சமாதிக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் மலர்மாலை அணிவித்து  தமது அஞ்சலிகளை செலுத்தியதுடன் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் சமாதிக்கு அவரது மனைவி மாலை அணிவித்து  அஞ்சலியை செலுத்தினர்.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஆலோசகர் தம்பையா யோகேஸ்வரன் உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் மட்டு,அம்பாறை இணைப்பளர் ஆர் ஆர்.டிஸ்கரன் முன்னாள் போராளிகள் ஆகியோரும் கலந்து கொண்டு தமது அஞ்சலி உரைகளை ஆற்றியிரந்தனர்.

இவ் இளைஞர் படுகொலையானது கடந்த 2002ஆண்டு 10மாதம் 09ஆம் திகதி காஞ்சிரம்குடா இரானுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது இரானுவத்தினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் திருக்கோவில் பிரதேசத்தினை சேர்ந்த மாணவர்கள் உற்பட 7தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர்.இதேவேளை மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்கள் கடந்த 2005.02.08ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.