இரட்டைக் கொலையினால் ஸ்தம்பிதமடைந்தது ஏறாவூர்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும், உயிரிழந்த மாணவனுக்கு நீதிவேண்டியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சவுக்கடி, குடியிருப்பு முருகன் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 27 வயதுடைய தாயும் அவரது 11வயதுடைய மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு, கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 06 கல்வி பயிலும் பீ.மதுசன் அவரது தாயான 26 வயதுடைய மதுசாந்தி பீதாம்பரம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.இவர்களின் படுகொலை தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் படுகொலையினைக் கண்டித்தும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தக் கோரியும் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்,பாடசாலை சமூகம்,கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.

பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள்,பெற்றோர்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சுலோகங்களைத் தாங்கியவாறு பிரதான வீதியுடாக குடியிருப்பு பொதுநூலகம் வரை சென்றதுடன் அங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வித்தியாவின் கொலைகளை தொடர்பான சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு நீதி வழங்கியதுபோன்று இந்த கொலை தொடர்பிலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் என ஆர்ப்பாட்டக்கார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமனற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் கலந்துகொண்டு கொலைக்கு கண்டத்தினை தெரிவித்ததுடன் கொலையாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.