பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய 'கிராமிய கலைகளின் ஆற்றுகை' நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய 'கிராமிய கலைகளின் ஆற்றுகை'  நிகழ்வு வவுணதீவு பிரதேசத்தின் நாவற்காடு சித்திவினாயகர் ஆலய முன்றலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ( 17ஆம் திகதி ) நடைபெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயவலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும்  கலை நிகழ்வுகளான கூத்து, கும்மி, வசந்தன், கரகம், நாட்டார் பாடல் உள்ளிட்ட நிகழ்வுகளின் ஆற்றுகைகள் நடைபெற்றதுடன் அதுதொடர்பிலான கருத்துரைகளும் இடம்பெற்றது.



பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தராசா ஒழுங்குசெய்த இந் நிகழ்வில் அதிதிகளாக, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.தங்கத்துரை, கலாபூசனம் க.மயில்வாகனம், கலாபூசனம் மூ.அருளம்பலம், அதிபர் த.கோபாலப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட வீ.தங்கத்துரை உரையாற்றுகையில், இவ்வாறான கலை கலாசார நிகழ்வுகள் எமது பாரம்பரிய பண்பாடுகளையும் கலைகளையும் அழிந்துவிடாமல் எதிர்கால சந்ததிக்கும் கொண்டு செல்ல வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆகவே எமது கலைஞர்கள் பாரம்பரிய தமிழ் கலைகளை வளர்க்க தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

எமது இளம் சமுதாயத்தினர் மிகவும் திறமைவாய்ந்தவர்கள் அவர்கள் கல்வி, விளையாட்டு போன்ற துறைகளுடன் மட்டும் நின்றுவிடாது எமக்குச் சொந்தமான பாரம்பரிய கலைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த கலைகளை வளர்ப்பதற்காக அரசும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் கலைஞர்களின் வளர்ச்சிக்காக போதிய உதவிகளை தொடர்ந்தும் வழங்க வேண்டும்.  இவ்வாறு உதவிகளும் ஊக்கங்களும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இலைமறைகாயாக இருக்கும் கலைஞர்கள் வெளியே வருவார்கள்.

கலைகளில் நாட்டார் பாடல் என்பது தமிழ் மக்களிடையே பிறப்பிலிருந்து இறப்பு வரை பின்னிப் பிணைந்துள்ளது, அது தாலாட்டில் தொடங்கி விளையாட்டுக்களிலும்,  விவசாயப் பாடலாகவும், காதல் பாடலாகவும் இவ்வாறு சந்தேச நிகழ்வுகளிலும் துக்க சம்பவங்களிலும் எம்மிடையே தொடர்ந்து வருகின்றது.

இத்தகைய பாரம்பரிய கலைகளும் நிகழ்வுகளும் ஒரு மனிதனது உள்ளத்தையும் வாழ்க்கையையும் நல்வழிப்படுத்துவதாக மட்டுமே அமைந்துவிடுகின்றது, எனவே அத்தகைய கலைகளை நாம்  வளர்க்க ஊக்கமளிக்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.