விலை அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய ஜனாதிபதி உத்தரவு

விலை அதிகரிப்புக்கு உட்பட்டுள்ள அரிசி, மீன் வகைகள், நெத்தலி மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

வாழ்க்கை செலவு குறித்து ஆராயும் குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பொருட்களை இறக்குமதி செய்து சதொச விற்பனை நிலையத்தினூடாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் மீதான விலை அதிகரித்து காணப்படுவதாக குறித்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

இதனை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.