கண்டி - மட்டக்களப்பு நோக்கிப் பயணிகளுடன் புறப்பட்ட பஸ் குடைசாய்ந்து விபத்து; 9 பேர் படுகாயம்-

கண்டியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிகளுடன் புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை ரிதிதென்ன சாலைக்குச் சொந்தமான பஸ், வெலிக்கந்தை – நாமல்கம பிரதேசத்தில் நேற்று (11) மாலை குடைசாய்ந்ததில் அதில் பயணித்த சாரதி, நடத்துநர் உட்பட 09 பேர் படுகாயமடைந்துள்ளனரென, வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் இருவர் பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் சத்திர
சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, அதே இடத்தில் ஏக காலத்தில் நடந்த வான்-சைக்கிள் மோதுண்ட பிறிதொரு விபத்தில் சைக்கிள் பயணி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
கண்டியிலிருந்து நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு மட்டக்களப்பு  நோக்கிப் புறப்பட்டு இந்த பஸ், கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை வழியாக வெலிக்கந்தையூடாச் சென்று கொண்டிருக்கும்போது, மாலை 6.20 அளவில் பஸ் வீதியிலிருந்து விலகி குடைசாய்ந்தது.
இவ்வேளையில் உதவிக்கு விரைந்த பிரதேச வாசிகளால் பஸ்ஸிலிருந்த சாரதி, நடத்துநர் உட்பட பயணிகள் மீட்டெடுக்கப்பட்டதோடு, காயமடைந்தவர்கள் அருகிலிருந்த வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.