மதுபானச்சாலையினை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை குறைக்கக்கோரியும் ஆரையம்பதியில் உள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் மற்றும் மகளிர் அமைப்புகள், அரசியல்கட்சிகளின் உறுப்பினர்கள், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

யுத்தத்திற்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபானச்சாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவற்றினை மட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், ஆரையம்பதி பகுதியில் இரண்டு மதுபானச்சாலைகள் சட்ட விரோதமான முறையில் இயங்கி வருவதாகவும் அதற்கு எதிராக 2015 ஆம் ஆண்டில் இருந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும் சில அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்த மதுபானசாலைகள் இயங்கிவருவதாகவும் அங்கு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டு குறித்த மதுபானச்சாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படக்கூடாது என அங்கு தெரிவிக்கப்பட்டதுடன், அதனையும் மீறி அனுமதி வழங்கப்பட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.