கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்க தீர்மானம்

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சில் நேற்று  (17) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையினை பிரித்து உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பது சம்பந்தமாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இவ் உயர் மட்டக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளான எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், கோடீஸ்வரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், ஆசாத் சாலி, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை மாநகர சபை பிரிப்பு சம்பந்தமாக குறிப்பாக சாய்ந்தமருது கல்முனை விவகாரங்கள் அலசி ஆராயப்பட்டு மூன்று முஸ்லிம் பெரும்பாண்மை சபைகளையும் ஒரு தமிழ்ப் பெரும்பாண்மை சபையையும் கொண்டதாக நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் தரப்பு பிரதிநிதிகள் சிலர் நியாயமற்ற கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்துப் பேசியபோது பிரதி அமைச்சர் ஹரீஸ் சரியான விளக்கத்தைக் கொடுத்து அவர்களைத் தெளிவுபடுத்தியதனால் நான்கு சபைகளை உருவாக்குவது என்ற இணக்கப்பாடு காணப்பட்டு அத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


கல்முனையினை நான்கு உள்ளுராட்சி சபைகளாக பிரிப்பது தொடர்பில் கல்முனையில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாட்டை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு தெளிவுபடுத்தினார். குறித்த நான்கு சபைகளும் 1987 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த சபைகளின் எல்லைகளுடன் உருவாக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். இந்த எல்லைகள் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியினாலும் உருவாக்கப்பட்டதல்ல, 1897இல் பிரிடிஸ் ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட எல்லைகளாகும் எனவே இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது முஸ்லிம் தமிழ்ப் பிரதேசங்களின் புதிய எல்லை கோரிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இருந்தபோதிலும் இது தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் 5 பேரையும் தமிழ் பிரதிநிதிகள் 5 பேரையும் கொண்ட குழு மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடாத்துவதென  முடிவெடுக்கப்பட்டது.