சிறைக் கைதிகளுக்கு கண் பரிசோதனை

மட்டக்களப்பு சிறைச்சலையிலுள்ள சிறைக்கைதிகளின் நலன் கருதி, கைதிகளுக்கு கண் பரிசோதனை செய்யும் நடவடிக்கை வியாழக்கிழமை மாலை (16) இடம்பெற்றதாக, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.

பிறண்டினா நிறுவனம் ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்து, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அனுசரணையில் இந்த கண் பரிசோதணை நடவடிக்கை இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.எச்.யூ.அக்பரின் தலைமையில், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரனின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த கண் பரிசோதனையின் போது, 50 வயதுக்கு மேற்பட்ட கைதிகளின் கண்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், உத்தியோகத்தர்களின் கண் பரிசோதனையும் இடம்பெற்றது.

இந்நிலையில், கண்ணாடி தேவையானோருக்கு கண்ணாடிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.