ரயில்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தடை

ரயில்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் இடமளிக்கப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்எம்.அபேயவிக்கிரம இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

ரயில்களில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதன் காரணமாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகின்றது.

பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை மற்றும் இடையூறுகள் தொடர்பில் பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரயில்சேவை பொதுமக்களின் போக்குவரத்து சேவை வசதிக்காகவே நடத்தப்படுகின்றது . எனவே பயணிகளுக்கு இவ்வாறான சிரமங்களை எதிர்நோக்க இடமளிக்க முடியாது.

அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரயில்களில் இடம்பெறும் இவ்வாறான வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக பயணிகளின் பாதுகாப்பிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் தொடர்பிலும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். அதேபோன்று விசேடமாக இடம்பெறும் திருட்டுக்களுக்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகவும் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.