மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சம்பியன்

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட்  சங்கத்தினால்  நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கிரிக்கெட் அணியர் சம்பியன் கிண்ணத்தை முடிசூடிக்கொண்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சங்கத்தின் ஏற்பாடில் அங்கத்துவ பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கட் வீரர்களுக்கான " T/10 " என அழைக்கப்படும் சுற்றுப்போட்டியானது சனி,ஞாயிறு தினங்களில்(11-12,11.2017) காலை முதல் மாலைநேரம் வரை மட்/சிவாநந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இவ் ஆரம்ப நிகழ்வில் பாடசாலை சங்க தலைவரும், மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபருமான ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் ,ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதி முகாமையாளரும் பொறியியலாளருமான வை.கோபிநாத்,உடற்கல்வி ஆசிரியர்களான கே.ரவீந்திரன்,வை.அல்பிறின்ஸ் ஜேசுசகாயம் ஆகியோர்கள்  அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

இச்சுற்றுப்போட்டியில் பெரிய கல்லாறு மத்திய கல்லூரி,சிவானந்தா தேசியபாடசாலை,இந்துக் கல்லூரி ,மெதடிஸ்த மத்திய கல்லூரி ,புனித மிக்கேல் கல்லூரி,மற்றும் சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் ஆகிய ஆறு பாடசாலை அணிகள் பங்குபற்றியது.

இந்த கிரிக்கெட் ஆட்டங்களில் மெதடிஸ்த மத்தியகல்லூரி இந்துக் கல்லூரியையும்,பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அணி சிவானந்தா வித்தியாலயஅணியையும்,இந்துக் கல்லூரி அணி சந்திவெளி சித்தி விநாயகர்அணியையும் வெற்றி கொண்டிருந்தது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பமாகியது.இதன்போது குழு நிலை போட்டிகளில் புனித மிக்கேல் கல்லூரி, பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அணியையும், மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி சந்திவெளி சித்தி விநாயகவித்தியாலய அணியையும் , புனித மிக்கேல் அணி , சிவானந்தா தேசியபாடசாலை அணியை வெற்றி கொண்டு அரையிறுதியை உறுதி செய்தது.இதன்படி முதலாவது அரையிறுதி போட்டியில்
மெதடிஸ்த மத்தியகல்லூரி அணியினர் புனித மிக்கேல் கல்லூரி அணி நிா்ணயித்த ஓட்ட இலக்கை போட்டியின் இறுதிப் பந்து வரை போராடி மெதடிஸ்த மத்தியகல்லூரி அணி வெற்றி பெற்றது.மிகமிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மெதடிஸ்த மத்தியகல்லூரி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதேபோன்று கடைசிப் பந்து வரை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்துக்கல்லூரி அணியை வெற்றி கொண்ட பெரிய கல்லாறு மத்தியகல்லூரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

 இறுதிப்போட்டியில் முதலி்ல் துடுப்பாடிய மெதடிஸ்த மத்தியகல்லூரி அணி 96 என்ற இலக்கை பெரிய கல்லாறு மத்தியகல்லூரி அணிக்கு நிர்ணயித்தது.இதன்படி 5 ஓவர் முடிவில் 36 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இதன்படி சுற்றுப் போட்டியின் சம்பியனாக மெதடிஸ்த மத்தியகல்லூரி  தெரிவானது.

இச்சுற்றுப் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராக மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியைச் சேர்ந்த எல்.ஆகாஷும், சிறந்த துடுப்பாட்ட வீரராக நி.விதுசனும் இச்சுற்றுப் போட்டித் தொடரின் சிறந்த வீரராக பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியைச் சேர்ந்த தனுசனும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆறுதல் போட்டிக்கான கிண்ணத்தினை சிவாநந்தா தேசிய பாடசாலைஅணி சுவீகரித்தது. முதலாம்,இரண்டாம் இடங்களை பெற்ற அணிகளுக்கு கிண்ணங்களும் பணப்பரிசுகளும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சங்க தலைவர் வழங்கி வைத்தார்.இவ் இறுதி நிகழ்வில் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.