ஐக்கிய தேசிய கட்சியினால் கைப்பற்றப்படும் முதலாவது சபையாக கோறளைப்பற்று இருக்கும்: அமீர் அலி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினால் கைப்பற்றப்படும் முதலாவது சபையாக கோறளைப்பற்று இருக்கும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையினை கைப்பற்றும் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் கைப்பற்றப்படும் முதலாவது சபையாக கோறளைப்பற்று இருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தகாலத்திலும் இல்லாத அளவுக்கு வேட்பாளர்கள் அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் இணைத்து இந்த பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம். அகில, இங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டமைப்பினை உருவாக்கி அம்பாறை மாவட்டத்திலும் இலங்கையின் வேறு பாகங்களிலும் போட்டியிடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. தேர்தல் கூட்டு என்பது கட்சிகளிடையே கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்” என கூறினார்.