மின் கட்டணத்தில் அதிகரிப்பு இல்லை; துண்டிப்பும் கிடையாது

மின்சார கட்டணங்களை அதிகரிக்கப் போவதுமில்லை, மின்சார துண்டிப்புக்களை மேற்கொள்ளப்போவதுமில்லையென மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய உறுதியளித்தார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மின்சார விநியோகத்தில் 97 வீதம் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய இதனைத் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபைக்கு சர்வதேச ரீதியில் சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிட்ச் ரேட்டிங் சர்வதேச நிறுவனத்தினால் 'ட்ரிபிள் ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. மின்சாரத்துறையில் கொண்டிருக்கும் சிறப்பான செயற்பாட்டுக்கு அமைய இவ்வாறான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

"இவ்வாறான நிலையில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கோ அல்லது மின்சார துண்டிப்புக்களை மேற்கொள்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்படாது. இந்த உறுதிமொழியை நாம் நுகர்வோருக்கு வழங்குகின்றோம்" என்றார்.

மின்சார தட்டுப்பாடு இருப்பதாக சிலர் கூறுவருகின்றபோதும் அவ்வாறான தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அண்மைய இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மின் விநியோகம் பெருமளவு சீர்செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்பகுதியில் ஏற்பட்ட சூறாவளியினால் 10 இலட்சம் நுகர்வோருக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. இதில் 97 வீதம் இணைப்புக்கள் மீள வழங்கப்பட்டுள்ளன. சிறப்பான மின்சார கட்டமைப்பு மற்றும் திறமையான அதிகாரிகளின் வினைத்திறனான சேவையின் ஊடாக ஒருசில நாட்களிலேயே மின்விநியோகத்தை சுமுகமாக்கியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.