அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் மனிதச்சங்கிலிப் போராட்டம்!

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலும், மனிதச்சங்கிலிப் போராட்டமும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

காரைதீவு சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன் போது அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய தன்னே ஆனந்த தேரர் மற்றும் அம்பாறை முஸ்லீம் வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர் ஏ.ஜசீர் ஆகியோர் அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தன்னே ஆனந்த தேரர் ‘எதிர்வரும் தேர்தலிற்கு முன்னர் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்காவிட்டால் நாம் தேர்தலை முற்றிலும் புறக்கணிப்பதுடன், இது குறித்து மத்திய அரசும் மாகாண அரசும் விரைவில் தீர்மானத்தைப் பெற்றுத்தர வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.