மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து பாதையான கல்லடி பாலத்தினை மறித்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

நல்லாட்சியில் கிழக்கு மாகாணசபையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஒன்று கூடிய பட்டதாரிகள் நல்லாட்சி அரசாங்கம் தமக்கான வேலைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆசிரிய போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

‘மத்திய மாகாண அரசாங்கமே பட்டதாரிகளை ஏமாற்றாதே’ என்னும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள், திருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரிகள் போட்டிப்பரீட்சையில் 98 புள்ளிகளைப்பெற்ற ஒருவர் தொழில்பெறும்போது 110 புள்ளிகளைப்பெற்ற மட்டக்களப்பு பட்டதாரிகள் தொழில்வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் தமது போராட்டத்திற்கு இதுவரை நியாயமான தீர்வினை வழங்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

கல்லடி பாலத்தினை மறித்து அந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து  மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை கண்டன பேரணியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கான மகஜரையும் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரிடம் கையளித்தனர்.