கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன் : நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தையும் பொறுப்பையும் நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான இடமாற்றம் விரைவில் எனக்கு வரும்.
நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்த ஒன்றே நீதிமன்றக் குடும்பம். இந்த மூன்று தரப்பினரிடமும் ஒற்றுமை அவசியம். அதுவே எனது சேவையின் குறிக்கோளாகும்.
கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா. அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது. யாழ்ப்பாணத்து வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டேன்” என மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.