அதிகாரி மீது நள்ளிரவில் தாக்குதல் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்புப் பகுதில் மீன்பிடி திணைக்கள அதிகாரி மீது நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில், மீனவர்கள் தாக்கியதில் மீன்பிடித் திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த களப்புப் பகுதில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான வலைகள் வீசி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீன்பிடி திணைக்களத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து நள்ளிரவு 12 மணியவில் மீன்பிடித் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் களப்புப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களின் தோணிகளை, மீன்பிடி அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்கள் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது மீன்பிடி திணைக்கள உதவி மேற்பார்வையாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட மீனவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.