விசேட தேவைகளை உடையவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் : தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பார்வையை இழந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாக்களிப்பதற்காக வேறு ஒருவரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவர்களுக்கான உதவியாளர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருப்பதுடன் அவர் வேட்பாளராக இருக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், உதவியாளர் அரசியல் கட்சியின் அங்கீகாரம் பெற்ற முகவராகவோ, வாக்குச் சாவடிக்கான பிரதிநிதியாகவோ இருக்கவும் கூடாது. இதேவேளை, உதவியாளரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய காரணங்கள் சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான விண்ணப்பப்படிவங்களை கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும் என்பதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணைத்தளத்திலிருந்தும் இது தொடர்பான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.