சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் விடுமுறையில் நிறைவு செய்ய தீர்மானம்

இந்த வருடம் முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் மாத விடுமுறை காலத்திலேயே நிறைவு செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக பல பாடசாலைகளை மூட வேண்டிய அதேவேளை ஆசிரியர்களும் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகின்றது.

இதனால் மாணவர்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இதுவரைக்காலமும், புதிய வருடமொன்றில் முதல் பாடசாலை வாரம் முடிவடைந்த பின்னரேயே கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது 70 இற்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டதுடன் திருத்தப்பணிகளில் 35,000 ஆசிரியர்கள் ஈடுப்படுத்தப்பட்டு வந்தனர்.

இதனால் பாடசாலை விடுமுறை காலத்திலேயே விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை நிறைவு செய்வது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.