புதுக்குடியிருப்பு-கிரான்குளம் எல்லைப்பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இருவர் காயம்

(க.விஜயரெத்தினம்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு-கிரான்குளம் எல்லை வீதியில் இன்று (12.1.2018) வெள்ளிக்கிழமை காலை 7.00மணியளவில்  இடம்பெற்ற வாகனவிபத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஜே.டீ.எம்.ஜெயலால் தெரிவித்தார்.

ஏறாவூரில் இருந்து இறைச்சிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்முனைப்பகுதியில் விநியோகித்துவிட்டு, மீண்டும் ஏறாவூர் பகுதிக்கு திரும்பி பயணிக்கையில் மேற்படி இடத்தில் விபத்துக்குள்ளானது.அதிக வேகமாகவும்,நித்திரை தூக்கத்தில் வாகனத்தை செலுத்தியதாலும் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் அருகாமையில் உள்ள மரங்களை சேதப்படுத்திக்கொண்டு கொங்கிறீட்வேலியில் மோதுண்டு காணப்பட்டது.

இதனால் வாகனத்தின் முன்கண்ணாடி உடைந்து கிழே விழுந்துள்ளது. விபத்தில்  வாகனத்தை செலுத்தி வந்த ஏறாவூரைச் சேர்ந்த  சாரதியான எம்.ஏ.அஸீர்கான்(வயது-23) மற்றும் இவ்விபத்தினால் பின்னால் வந்த வாகனம் மோட்டார்சைக்கிளில் பயணித்த வே.நித்தியானந்தம்(வயது-38) என்பவரை மோதி காயத்துக்கு உட்படுத்தியுள்து.இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.கண்,வாய்,கால் போன்றவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.