தமிழில் 'வணக்கம்' எனக்கூறி தமிழர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டனில் வாழும் தமிழர்களுக்கு அந்நாட்டு பிரதமர் தெரீசா மே தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை அவர் பதிவேற்றி உள்ளார்.

அதில் பேசியுள்ள பிரதமர் தெரீசா, தமிழில் 'வணக்கம்' எனக்கூறி தன் உரையை தொடங்கியுள்ளார்.

பிரிட்டனில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தைப் பொங்கல் கொண்டாட ஒன்று சேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பழையவற்றை விடுத்து, புதிய வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளும் நேரமிது என்றும் பிரதமர் மே தெரிவித்தார்

அறுவடைக்கு மட்டுமல்ல, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கும் இது நன்றி தெரிவிக்கும் நேரம் என அவர் கூறினார்

பிரிட்டனில் உள்ள தமிழர்கள் அந்நாட்டிற்கு ஆற்றிய பங்கைளிப்பை நினைவுப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என குறிப்பிட்ட மே, தமிழ் சமூகத்தை வாழ்த்தியுள்ளார்.

பிரிட்டனை பரந்துபட்ட நாடாக்கியதில் தமிழர்களின் பங்கு மிகப்பெரியது என்றும் பிரட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார்..